சுயம்பிரபையின் தோற்றப் பொலிவு

1534. வேய்காயு மென்பணைத்தோள் வெண்செந்
     தனமெழுகி முத்தந் தாங்கி
ஏகாய மிட்ட வெண்டுகிலின்
     மகளி ருழைநின் றேத்த
ஆகாய மியல்கின்ற வருமணிநல்
     விமானத்தி னகத்தாள் போலு
மாகாய வரையாளு மன்னர்கோன்
     மடமகளை வம்மின் காண்போம்.
     (இ - ள்.) வேய் காயும் - மூங்கிலைச் சினக்கின்ற, மென்பணைத் தோள் -
மென்மையுடனே பருத்த தோள்களிடத்தே, வெண்சந்தனம் மெழுகி - வெள்ளிய சந்தனக்
குழம்பைப் பூசி, முத்தந் தாங்கி - முத்தமாலைகளைச் சுமந்துகொண்டு, ஏகாயம் இட்ட
வெண் துகிலின் மகளிர் உழை நின்று ஏத்த - உத்தரீயம் இட்டவராய், வெள்ளாடை உடுத்த
ஏவன் மகளிர்கள் பக்கத்தே நின்று வாழ்த்தா நிற்ப, ஆகாயம் இயல்கின்ற - விசும்பிடத்தே
இயங்குகின்ற,
    
     அருமணி நல்விமானத்தின் - பெறற்கரிய மணிகளால் ஒப்பனை செய்யப்பட்ட
விமானத்தின், அகத்தாள் போலும் - உள்ளே வீற்றிருக்கின்றாள் போலும், மாகாயவரை
ஆளும் - பெரிய உருவத்தையுடைய மலைகளை ஆட்சி செய்யும், மன்னர்கோன் -
சக்கரவர்த்தியாகிய சடியினது, மடமகளை - இளமையுடைய மகளாகிய சுயம்பிரபையை,
காண்பாம் - சென்று காண்போம், வம்மின் - தோழிகளே வாருங்கோள், (எ - று.)

மூங்கிலைச் சினக்கின்ற பணைத் தோளிலே, வெண்சந்தனம் பூசி, முத்தணிந்து,
உத்தரீயமிட்ட மகளிர் உழைநின் றேத்த, விமானத்தின் அகத்தேயுள்ள, வரைமன்னன்
மகளாகிய சுயம்பிரபையையும், இனிக் காண்போம், வாருங்கோள்! என்றார், என்க.

 (404)