களி யாட்டம்

வேறு

1540. இன்னன பலவுங் காட்டி
     யிளையவர் காணும் போழ்தின்
மன்னவ 1ர் மன்னர் தம்மேன்
     மாலையு மலருஞ் சிந்தி
2மின்னவிர் சிவிறி தம்மால்
     விரைபொழி தாரை வீக்கித்
தொன்னக ரார்வ மென்னுங்
     களித்தொழி றொடக்கிற் றன்றே.
     (இ - ள்.) இன்னன - இவை போல்வன, பலவும் காட்டி - பற்பல அழகையும்
எடுத்துக் கூறி, இளையவர் - இளமகளிர்கள், காணும் போழ்தில் - உலாக் காட்சியைக்
கண்டு மகிழும்போது, மன்னவர் - அரசர்கள், மன்னர் தம்மேல் - ஏனைய அரசர் மேலே,
மாலையும் மலரும் சிந்தி - மலர் மாலைகளையும் விடுபூக்களையும் வீசியும், மின்னவிர்
சிவிறி தம்மால் - ஒளிர்கின்ற துருத்திகளாலே, விரை பொழி தாரை வீக்கி - மணங்கலந்த
நீர்த்தாரைகளை வீசியும் வர இவ்வாற்றால், தொன்னகர் - பழைதாகிய போதன நகரம்,
ஆர்வம் என்னும் - வெற்றியால் விளைந்த விழைவு என்கிற, களித்தொழில் -
களியாட்டமாகிய தொழிலை, தொடங்கிற்று அன்றே - ஆடத் தொடங்கியது; அன்று, ஏ:
அசை, (எ - று.)

     மகளிர்கள் ஒருவர்க் கொருவர் இவ்வாறு திருவுலாக் காட்சியைக் காட்டி
மகிழும்போது வெற்றியாலே களிப்புற்ற அரசர்கள், தம்முள் மாலையும் மலரும் சிந்தி,
தாரை வீக்கியும்வர, இவ்வாறு, தொன்னகரத்தே களியாட்டம் தொடங்கிற் றென்க.

 (410)