ஞாயிறெழுதலும் திவிட்டன் சுயம்பிரபை மாளிகையை எய்துதலும்

1549. காரிரு ளகன்ற போழ்திற்
     கமலினி யென்னுஞ் செல்விக்
1கோருரு ளாழி வெய்யோ
     னருளிய வுதயஞ் சேர்ந்தா
னாரிரு னனைய கூந்தற்
     கருளிய மனத்த னாகிப்
பேரரு ளாழி யானும்
     பெயர்ந்துபொன் மாடஞ் சேர்ந்தான்.
     (இ - ள்.) கார் இருள் அகன்ற போழ்தின் - கரிய இராப்பொழுது கழிந்தவுடனே,
கமலினி என்னும் செல்விக்கு - கமலினி என்னும் பெயரையுடைய (தாமரை) தன் தேவிக்கு,
அருளிய - அருள்செய்யும் பொருட்டு, ஓர் உருள் ஆழி வெய்யோன் - ஒற்றை
உருளையுடைய தேர் ஊரும் ஞாயிறு, உதயம் சேர்ந்தான் - குணக் குன்றத்தை எய்தினான்,
ஆர் இருள் அனைய கூந்தற்கு - பொருந்திய இருள் போன்ற கூந்தலையுடைய
சுயம்பிரபையாகிய தன் தேவிக்கு, அருளிய மனத்தனாகி - அருள் கூர்ந்த
மனத்தையுடையனாதய், பேர் அருள் ஆழியானும் - பெரிய அருளைச் செய்து உலகை
ஓம்பும் ஓர் உருளையையுடைய திவிட்டநம்பியும்,

     பெயர்ந்து - அவ்விடத்தை விட்டகன்று, பொன் மாடம் சேர்ந்தான் - பொன்னா
லியன்றதொரு மேனிலை மாடத்தை எய்தினான், (எ - று.)

     அவ்வாறு இருள்தேய, வருந்தி இரவும் கழிந்தவுடனே, ஞாயிறு, தன் தேவியாகிய
தாமரைக்கு அருள் செய்யக் கருதிக் குணக்குன்றினை எய்தினான்; நம்பியும், தன்
தேவியாகிய சுயம்பிரபைக்கு அருள்செயக் கருதி, ஒரு பொன் மாடத்தை எய்தினான், என்க.

(419)