1585. கள்வர் தாம்பல ரெனக்கடல் வண்ணன்
உள்வி ராவுநகை சேருரை கேட்டே
வெள்கி வேந்தனரு கேயிரு பாலும்
பள்கி நோக்குபு பயிர்த்து நடந்தான்.
     (இ - ள்.) கடல்வண்ணன் - திவிட்டன், கள்வர் தாம் பலர் என - இப்பொழிலிடத்தே
பலர் கள்வர் உளர் என்று கூறிய, உள்விராவு நகைசேர் உரை கேட்டே - புறந்தோன்றாமல்
அகத்துள்ளே நகைப்புடன் கூடிய அசதியுரையை விதூடகன் கேட்டு, வெள்கி - அஞ்சி,
வேந்தன் அருகே - திவிட்டன் பக்கத்திலே நெருங்கி, இருபாலும் - இரண்டு
பக்கங்களினும், பள்கி நோக்குபு - வெருவிப் பார்த்துக்கொண்டு, பயிர்த்து - மனங்
கொளாதவனாய்க் கூசி, நடந்தான் - நடக்கலானான், (எ - று.)

     இப் பொழிலிடத்தே கள்வர் பலருளர் எனக் கேட்ட வேதியன், பெரிதும்
அஞ்சியவனாய், நம்பியை அணுகி, இருபுறமும் அச்சத்துடனே பார்த்துக் கூசி நடந்தான்
என்க.

(455)