(இ - ள்.) யாது கண்டனை என - ஏடா பார்ப்பன மகனே! ஏன் அஞ்சுகின்றாய், நீ இப்பொழுது என்ன கண்டனை என்று திவிட்டன் வினவ, இதனுள் வாழ்வது ஓர் பூதம் உண்டு - அரசே! இப்பளிங்கு மேடையினூடே உறைவதாகிய ஒரு பூதம் உளது, அது - அப்பூதம், புடைத்துண்ணும் - நம்மை அடித்துக் கொன்று தின்றுவிடும், இங்கு இனி இருப்பின் - இவ்விடத்தே யாம் இனி இருப்போமாயின், ஆதலால் - ஆகையாலே, போத - அரசே! வருக வருக, என்று அந்தணன் புலம்பிக் கூறினான் - என்று அவ்விதூடகன் அழுது கூறுவானானான், (எ - று.)அவ்வாறு ஓடுகின்ற விதூடகனை, நம்பி ஏடா! பார்ப்பன மகனே! இங்கு நீ அஞ்சுதற்கு யாது கண்டனை என, அரசே! இதனுள் ஒரு பூதம் உளது; அது நம்மை அடித்துத் தின்றுவிடும்; ஆதலால், விரைந்துயாம் போய்விடவேண்டும்; வருதி! வருதி! என்று புலம்பியுரைத்தான் என்க. |