நம்பி அது பூதமன்று நின்னிழல்காண் எனல

1599. மின்னிழற் பூணவன் மெல்ல நக் கது
நின்னிழற் 2காணென நிற்க நின்னுரை
என்னிழ லென்னொடு மியங்கி னல்லது
கன்னிழ லுட்புகிற் காண்ட லாகுமே.
     (இ - ள்.) மின்னிழல் பூணவன் மெல்ல நக்கு - மின்னொளி மிக்க
அணிகலன்களையுடைய திவிட்டன் புன்முறுவல் கொண்டு, அது - அவ்வுருவம்,
நின்நிழல்காண் என - உன்னுடைய நிழலேயாம் பிறிதன்றுகாண் என்று கூற, நின்னுரை
நிற்க - அரசே உன்னுடைய மொழி அமைக, என்நிழல் என்னொடும் இயங்கின் அல்லது -
என்னுடைய நிழல் என்னொடு கூட இயங்குமேயன்றி, கல்உள் நிழல் புகில் காண்டல்
ஆகுமே - இக்கல்லினுள் அந்நிழல் புகுமாயின் அதனை நாம் எவ்வாறு காணுதல் கூடும்?
(எ - று.)

அவ்வாறு நின்னாற் காணப்படும் உருவம் உன்னடைய நிழலன்றிப் பிறிதில்லை என்று
நம்பிகூற, விதூடகன், அரசே! என்னிழல் ஆயின் அஃது என்னோடு இயங்குவதன்றி இக்
கல்லினுள் புகுமோ! புகுந்தால் பின்னர் அதனை யாம் காணுதல் கூடுமோ! கூடாதாகலின்
அது பூதமே! என்றான்; என்க.

(469)