நெய்தல் நிலம்

16. கலவ ரின்னிய முங்கட லச்சிறார்
புலவு நீர்ப்பொரு பூணெறி பூசலும்
நிலவு வெண்மண னீளிருங் கானல்வாய்
உலவு மோதமு மோங்குமொர் பாலெலாம்.
 
     (இ - ள்.) கலவர் இன் இயமும் -மரக்கலங்களையுடைய பரதவர் முழக்கும் இனிய
இசைக்கருவி முழக்கமும்; கடல் அ சிறார் புலவுநீர் பொருபூண் எறி பூசலும் -
கடலினிடத்தே விளையாடும் அந்நெய்தல் நிலச்சிறுவர்கள் புலால்நாற்றம்வீசும்நீரினிடத்தே
தாம் அணிந்துள்ள அணிகலன் களை எறிந்து விளையாடும் ஆரவாரமும்; நிலவு
வெள்மணல் - மிக வெண்ணிறமான மணலையுடைய; நீள் இரும் கானல்வாய் - நீண்ட
பெரிய கடற்கரைச் சோலைகளிலே; உலவும் ஓதமும் - வந்து உலாவுகின்ற கடல்
அலைகளின் ஒலியும்; ஒர்பால் எலாம் ஓங்கும்-அந்நாட்டின் ஒரு பகுதியான நெய்தல்
நிலத்தின் இடம் எங்கும் மிகுந்திருக்கும். எ - று.

     நெய்தல்நிலத்தின் இயல்பை இவ்வாறு கூறினார். கடலுங் கடலைச் சார்ந்த இடமும்
நெய்தல். கலவர்; கலம் என்பத னடியாகப் பிறந்த பலர் பாற்பெயர். அச்சிறார் என்றது
அந்நிலத்திலுள்ள சிறுவர் என்றவாறு.

 ( 16 )