நெய்தல் நிலம் | 16. | கலவ ரின்னிய முங்கட லச்சிறார் புலவு நீர்ப்பொரு பூணெறி பூசலும் நிலவு வெண்மண னீளிருங் கானல்வாய் உலவு மோதமு மோங்குமொர் பாலெலாம். | (இ - ள்.) கலவர் இன் இயமும் -மரக்கலங்களையுடைய பரதவர் முழக்கும் இனிய இசைக்கருவி முழக்கமும்; கடல் அ சிறார் புலவுநீர் பொருபூண் எறி பூசலும் - கடலினிடத்தே விளையாடும் அந்நெய்தல் நிலச்சிறுவர்கள் புலால்நாற்றம்வீசும்நீரினிடத்தே தாம் அணிந்துள்ள அணிகலன் களை எறிந்து விளையாடும் ஆரவாரமும்; நிலவு வெள்மணல் - மிக வெண்ணிறமான மணலையுடைய; நீள் இரும் கானல்வாய் - நீண்ட பெரிய கடற்கரைச் சோலைகளிலே; உலவும் ஓதமும் - வந்து உலாவுகின்ற கடல் அலைகளின் ஒலியும்; ஒர்பால் எலாம் ஓங்கும்-அந்நாட்டின் ஒரு பகுதியான நெய்தல் நிலத்தின் இடம் எங்கும் மிகுந்திருக்கும். எ - று. நெய்தல்நிலத்தின் இயல்பை இவ்வாறு கூறினார். கடலுங் கடலைச் சார்ந்த இடமும் நெய்தல். கலவர்; கலம் என்பத னடியாகப் பிறந்த பலர் பாற்பெயர். அச்சிறார் என்றது அந்நிலத்திலுள்ள சிறுவர் என்றவாறு. | ( 16 ) | | |
|
|