சுயம்பிரபை வித்தையால் தன்னுருக்கரந்து நிற்றல் | 1603. | மாலையமர் சிந்தையொடு வார்பொழின் மருங்கின் வேலையமர் கண்ணிவிளை யாடுதல் விரும்பி 3மேலையமர் விஞ்சையின் மறைந்துவிரை நாறும் சோலையமர் தோகையென வேதொழுது நின்றாள். | (இ - ள்.) மாலை அமர் சிந்தையொடு - திருமாலாகிய திவிட்ட நம்பியைப் பெரிதும் விழைந்த உள்ளத்தோடே, வார்பொழில் மருங்கின் - நீண்ட அப்பூம்பொழி லிடத்தே, வேலை அமர்கண்ணி - வேல்போன்ற கண்களையுடைய அச்சுயம்பிரபை, விளையாடுதல் விரும்பி - ஒரு விளையாட்டைச் செய்ய எண்ணி, மேலை அமர் விஞ்சையின் மறைந்து - தான் முன்னர் விரும்பிப் பயின்றதொரு வித்தையாலே தன் உருக்கரந்து, விரை நாறும் சோலை அமர் தோகை எனவே - மணங்கமழும் பூம் பொழிலிலே உரையுமொரு மயில் போன்று, தொழுது நின்றாள் - திவிட்டனை வணங்கி ஒரு சார் அவனறியாதே நிற்பாளாயினள், (எ - று.) திவிட்டன் தன்னைக் காணானாகவும், அவனைத் தொழுது நிற்றல் அவளது கற்புடைமையின் பெருமையை விளக்கும். “தெய்வம் தொழாஅள் கணவற் றொழுதெழுவாள்“ என்புழியும் கணவன் உறங்கும் பொழுதும் அவனைத் தொழுதல் என்றமை காண்க. மாலை - திருமாலாகிய திவிட்டனை. மாலை - மால் எனினுமாம். ஐகாரம் சாரியை என்க. வேலை - கடலுமாம். அமர் சிந்தை : வினைத் தொகை. அவ்விடத்தே வந்த தேவி திவிட்டனை அசதியாடல் கருதி வித்தையாலே உருக் கரந்து கைதொழுது நின்றாள் என்க. | (473) | | |
|
|