வேனில் வரவைக் கூறுதல்

161. தேங்குலா மலங்கன் மாலைச் செறிகழன் மன்னர் மன்ன!
பூங்குலாய் விரிந்த சோலைப் பொழிமதுத் திவலை தூவக்
கோங்கெலாங் கமழ மாட்டாக் குணமிலார் செல்வ மேபோல்
பாங்கெலாஞ் செம்பொன் பூப்ப விரிந்தது பருவ மென்றாள்.
 

     (இ - ள்.) தேங்குலாம் அலங்கல்மாலை - தேன் பெருகுகின்ற தொங்கி யசைவதான
பூமாலையையும்; செறிகழல் - கட்டிய வீரக்கழலையுமுடைய; மன்னர்மன்ன! -
அரசர்க்கரசனே!; பூங்குலாய் விரிந்த சோலை - மலர்கள் நிறைந்து மலரப்பெற்ற
சோலைகள்; பொழிமதுத் திவலை தூவ - பெருகுகின்ற தேன் துளிகளைச்
சிந்தும்படியாகவும்; கோங்கு எலாம் - கோங்க மரங்கள் எல்லாம்; குணம் இலார்
செல்வமேபோல் - நற்குணங்களில்லாதவர்களிடத்திலே பொருந்திய செல்வத்தைப் போல;
கமழமாட்டா - மணத்தை வெளிப்படுத்தாதனவாய்; பாங்கு எலாம் செம்பொன் பூப்ப -
பக்கங்களில் எல்லாம் செவ்விய பொன்னிறமான பூக்களைப் பூப்ப; பருவம் விரிந்தது
என்றாள் - வேனிற்காலம் வந்து பரவியது என்று கூறினாள், (எ - று.)

     கோங்குமலர்களின் மணம் சிறப்புடையதன்று, எனவே அதன் மணத்திற்கு
நற்குணமில்லாதவர்களுடைய செல்வம் உவமை கூறப்பட்டது. குணமிலார் செல்வத்திற்குக்
கமழமாட்டாமை புகழ்பெற மாட்டாமையாகும்.

( 43 )