இதுமுதல் 8 செய்யுள் ஒரு தொடர் பாரிசாத காமவல்லி மணம் உரைப்பன (இ - ள்.) இன்னன - இவை போல்வன பலவும், பாடி ஆட - பாடிக் கொண்டு அவ்விதூடகன் கூத்தாடுதல் செய்ய, ஈர்ங்கனி பலவும் - தேவி ஈரிய கனிகள் பலவற்றையும், கூவி - வரவழைத்து, முன்னவன் - பார்ப்பன னாகிய அவ்விதூடகன், ஆர ஊட்டி - ஆசைதீர உண்ணும்படி செய்து, முறுவலோடு - அவன் அவாவுடன் உண்ணுதலை நோக்கிப் புன்முறுவலுடன், அமர்ந்த பின்னை - அங்கு வீற்றிருந்த பின்னர், மன்னிய பாரிசாதம் - நிலைபெற்ற பாரிசாத மரத்தை, மணமகனாக நாட்டி - மணமகனாக வைத்து, அங்காமவல்லி கன்னி நாட்டி - அழகிய காமவல்லியை மணமகளாக வைத்து, கடிவினை தொடங்கலுற்றார் - அத்திருமண மக்கட்குத் திருமண விழா நிகழ்த்தத் தொடங்கினார், (எ - று.)முன்னவன் - முதல் வகுப்பினனாகிய பார்ப்பனன் என்க. விதூடகன் இவ்வாறு பல பாடலைப் பாடி ஆட, தேவி கனிபல தருவித்து ஊட்ட முறுவலோடமர்ந்த பின்னர், பாரிசாத காமவல்லி மணவிழாத் தொடங்கினர் என்க. |