1622. திருமணி நிழற்றுஞ் செம்பொற் றிலதமா முடியி னானுங்
குருமணிக் கொம்ப ரன்ன கொழுங்கய னெடுங்க ணாளும்
பருமணி பதித்த பைம்பொன் வேதிகைப் பாரி சாதம்
அருமணி 1யரும்பித் தாழ்ந்த வந்தளிர்ப் பொதும்பர் சார்ந்தார்.
     (இ - ள்.) திருமணி நிழற்றும் - உயரிய மணிகள் ஒளிரும், செம்பொன் திலதம் மா
முடியினானும் - செவ்விய பொன்னாலியன்ற மாண்பு மிக்க பெரிய முடியை உடைய
திவிட்டநம்பியும், குருமணி கொம்பர் அன்ன - நிறமமைந்த பவளப் பூங்கொம்பு போன்ற,
கொழுங்கயல் நெடுங் கண்ணாளும் - கொழுவியநீண்ட கயல் மீன் போன்ற
கண்ணையுடைய சுயம்பிரபையும், பருமணி பதித்த பைம்பொன் வேதிகை பாரிசாதம் - பரிய
மணிகள் பதித்துப் பசிய பொன்னாலே மேடை அமைக்கப்பட்ட பாரிசாத மரம், அருமணி
அரும்பித் தாழ்ந்த - அரிய மணிகளைப்போல அரும் பெடுத்துத் தழைத்துள்ள, அந்தளிர்
பொதும்பர் - அழகிய தளிர்மிக்க பூம்பொழிலை, சார்ந்தார் - எய்தினார், (எ - று.)

     முடியினானும், நெடுங்கணாளும் பாரிசாதம் அரும்பெடுத்துத் தழைத்துள்ள
பூம்பொழிலை எய்தினர், என்க.

(492)