திவிட்டன் வித்தையால் உருக்கரத்தல்

1630. பொன்னவிர் குழையி னாரைப்
     பொழில்விளை யாட லேவி
மன்னவன் மதலை மாட
     வளநக ரணுகு வான்போல்
தன்னைமெய் மறைத்தோர்
     விஞ்சை தாழிரு ளெழினி யாகப்
பின்னைமா தவனுந் தானும்
     1பிணையனா ருழைய னானான்.
     (இ - ள்.) பொன் அவிர் குழையினாரை - பொன்னாலாய ஒளிருகின்ற தோடுகள்
அணிந்த மகளிரை, பொழில் விளையாடல் ஏவி - அப்பொழிலில் விளையாடும் தொழிலிலே
செலுத்தி, மன்னவன் - திவிட்டன், மதலை மாட வளநகர் அணுகுவான் போல் - மதலை
மாடங்களையுடைய வளவிய நகரத்திலே புகுதப் போவானைப் போன்று காட்டி,
தன்னைமெய் மறைத்தோர் விஞ்சை - தன் திருமேனியை மறைத்துக்கொண்டு ஒரு
வித்தையே, தாழ் இருள் எழினியாக - தங்கிய இருளைச் செய்யும் திரைச்சீலையாகக்
கொண்டு, பின்னை - அங்ஙனம் மறைத்துக் கொண்ட பின்னர், மாதவனும் தானும் -
விதூடகனும் தானுமாக, பிணை அனார் உழையன் ஆனான் - மான்பிணையை ஒத்த
அம்மகளிரின் மருங்கே எய்தினான், (எ - று.)

     மன்னவன் குழையினாரை விளையாட ஏவி, மதலை மாடம் புகுவான் போன்று
காட்டி, வித்தையைத் தன்னையும், விதூடகனையும் மறையக் கொள்ளும், திரையாகக்
கொண்டு, மீட்டும் அம்மகளிர் மருங்கு வேதியனுடன் எய்தினான் என்க.
வித்தை தம்முடன் மறைத்தன் மாத்திரை திரைக்கு உவமை என்க. இது தொழிலுவமை.

(500)