மகளிர் ஓவியந்தீட்டும் மாண்பு

1637. வட்டிகைப் பலகை தன்மேல்
     மணிவண்ணன் வடிவு தீட்டி
ஒட்டிய வடிவிற் றம்மை
     யூடலோ டிருப்பக் கீறித்
திட்டமிட் டுருவ நுண்ணூற்
     றுகிலிகை தெளிர்ப்ப வாங்கிப்
பட்டமுங் குழையுந் தோடும்
     பையவே கனிவிப் பாரும்.
     (இ - ள்.) வட்டிகைப்பலகை தன்மேல் - ஓவியப்பலகையின் மிசை, மணிவண்ணன்
வடிவு தீட்டி - நீலமணியின் நிறமுடைய திவிட்டனுடைய உருவத்தை வரைந்து, ஒட்டிய
வடிவில் - அவ்வோவியத்தின் அணித்தாய உருவிலே, தம்மை - தங்கள் உருவத்தை,
ஊடலோடு இருப்பக் கீறி - ஊடியிருப்பவரைப்போல வரைந்து, திட்டமிட்டு - வரையறை
செய்துகொண்டு, உருவ நுண்ணூல் - ஓவியத்தை விளக்கும் நுணுகிய நூன் முறையாலே,
துகிலிகை தெளிர்ப்ப வாங்கி - தூரியக் கோல் கொண்டு விளக்கி, பட்டமும் குழையும்
தோடும் - நுதற்பட்டமும் குண்டலமும் தோடுமாகிய அணிகலனின் ஓவியங்களை, பையவே
- மெல்ல மெல்ல, கனிவிப்பாரும் - வண்ணங்களாலே விளக்கஞ் செய்வாரும், (எ - று.)

     வட்டிகைப் பலகை - ஓவியந்தீட்டற்குரிய பலகை. துகிலிகை - எழுதுகோல். உருவ
நுண்ணூல் - நுணுகிய ஓவிய நூல் தெளிர்ப்ப வாங்கி : ஒருசொல் நீர்மைத்து, விளக்கி.
கனிவித்தல் - விளங்குதல்.

     வட்டிகைப் பலகையின்மிசை திவிட்டநம்பியின் உருவம் வரைந்து அதனருகே தாம்
ஊடலோடிருப்பார் போன்று தம் வடிவினையும் வரைந்து பின்னர்த் துகிலிகைகொண்டு
நுண்ணிய வண்ண முதலிய தீட்டி விளக்கஞ் செய்வாரும் என்க.

     இச் செய்யுள், நந்தமிழ்நாட்டின் பண்டைநாள் ஓவியக்கலையின் மாண்பினை அறியப்
போதிய சான்றாதல்காண்க.

(507)