செய்குன்றம்

1646. வெள்ளித் திரண்மேற் பசும்பொன் மடற்பொதிந்
தள்ளுறு தேங்கனி 1ய தாய்பொற் றிரளசைந்து
புள்ளுறு பொன்வாழைக் கானம் புடையணிந்த
தெள்ளு மணியருவிச் செய்குன்றஞ் சேர்ந்தார்.
     (இ - ள்.) வெள்ளி வெண் திரள்மேல் - வெள்ளியாற் றிரட்டிய தண்டின் மேலே,
பசும்பொன் மடல் பொதிந்து - பசிய பொன்னாலியன்ற மடல்களால் மூடி, அள் உறு
தேங்கனி அதாய் - அளிகின்ற இனிய கனியாக, அம்பொன் திரள் அசைந்து - அழகிய
பொன்னைத் திரட்டியாத்து, புள் உறு - பொன்னாலாய பறவைகளையும் அமைத்த, பொன்
வாழைக் கானம் - பொன் வாழைப் பூம்பொழிலை, புடை அணிந்த - மருங்கிலே
உடையனவாய், தெள்ளும் மணி அருவி - தெளிந்த நீல மணிபோன்ற நிறமுடைய
அருவிகள் விழுகின்ற, செய் குன்றம் சேர்ந்தார் - செய்குன்றங்களை எய்தினர், (எ - று.)

     அள்ளுறுதல் - அளிதல், அதாவது கனிதல். செய்குன்றம் - பொழிலினுள்
மலையுறுப்புக்கள் அமையச் சிற்பிகளால் இயற்றப்படுகின்ற செயற்கை மலை. புட்கள்
பொன்வாழைக் கனியைக் கனியெனக் கருதி வருதற்குக் காரணமான எனினுமாம்.
வெள்ளித் தண்டின் மேலே பசும்பொன் மடல் போர்த்துத் தேங்கனியும் பொற்றிரளாற்
செய்து வைத்த பொன் வாழைக்கானம் புடையணிந்த செய்குன்றம் என்க.

 (516)