1651. மருவி மழைதவழு மையோங்க சாரல்
அருவி கொழித்த வருமணிகள் வாரித்
தெருவு படத்திருத்திச் சீலம் புனைவார்
உருவ நகரிழைப்பா ரொண்ணுதலா ரானார்.
     (இ - ள்.) மழை மருவி தவழும் மை ஓங்கு சாரல் அருவி கொழித்த அருமணிகள்
வாரி - முகில்கள் வந்து தவழ்கின்ற இருள்மிக்க தாழ்வரையிடத்தே ஒழுகும் அருவிகள்
ஒதுக்கிய பெறற்கரும் மணிகளை அள்ளி, ஒண்நுதலார் - ஒள்ளிய நெற்றியையுடைய
அம்மகளிர்கள், தெருவுபடத்திருத்தி - தெருக்களைப்போலச் சீர்திருத்தி, சீலம் புனைவார் -
ஒழுங்குபடுத்துவாராய், உருவ நகர் - அழகிய விளையாட்டு வீடுகளை, இழைப்பார் ஆனார்
- இயற்றுவாராய் விளையாட்டயர்வாராயினர், (எ - று.)

     ஒண்ணுதலார் அருவி கொழித்த மணிகளை வாரி வீடியற்றி விளையாட்டயர்ந்தார்
என்க.

(521)