இதுவுமது

1656. விண்டு சுடர்தயங்கு மேதகுமா மாணிக்கம்
கண்டு கவின்விரிந்த காயாந் துணரிவை
கொண்டு குழற்கணிது மென்று கொளலுறுவார்
வண்டு வழிபடர வாட்கண் புதைத்தியல்வார்.
     (இ - ள்.) விண்டுசுடர் தயங்கு மேதகு மாணிக்கம் கண்டு - வெளிப் பட்டு
ஒளிதிகழ்கின்ற மேன்மைமிக்க மாணிக்கமணியினைப் பார்த்து, கவின் விரிந்த காயாந்துணர்
- அழகு விரிந்த காயாவின் பூங்கொத்துக்கள் என்று கருதி, இவைகொண்டு குழற்கு
அணிதும் என்று - இவையிற்றைக் கொய்து எம் கூந்தலிலே சூடுவேம் என்று எண்ணி,
கொளல் உறுவார் - அவையிற்றைக் கொய்பவர், வண்டு வழிபடர - முன்னரே அவையிற்றை
அவ்வாறு கருதி ஆண்டு மொய்த்துள்ள வண்டுகள் அவையிற்றைவிட்டு அம்மகளிர்
கண்களை மலராகக் கருதிவீழாநிற்ப, வாட்கண் புதைத்து - தம் வாள்போன்ற கண்களைத்
தம் கையால் புதைத்தனராய், இயல்வார் - புறம்போகா நிற்பர், (எ - று.)

     மாணிக்கச் சுடர்கண்டு, இவை காயாவின் பூந்துணர் என்று, கொய்து சூட்டக் கை
நீட்டியவழி, அவற்றில் மொய்த்த வண்டு தேவியர் கண்ணை மலரெனக் கருதி வந்து
வீழ்தலாலே, வாட்கண் புதைத்தனராய்ப் புறம் போவார், என்க.
(526)