1657. | வேயோங்கு சாரல் விளைபுனங் காவல்கொண் டாயோ வெனமொழியு மம்மழலை யின்னிசையால் போயோங்கு பூஞ்சோலை வாழும் புனக்கிளிகள் மாயோன் மடந்தைமார் கூவி மகிழ்விப்பார். | (இ - ள்.) வேய் ஓங்கு சாரல் - மூங்கில்கள் ஓங்கி வளராநின்ற மலைச்சாரலிலே, விளைபுனம் காவல்கொண்டு - தினை முதலிய விளைந்துள்ள புனங்களைக் காவல்செய்து, ஆயோ என மொழியும் - கிளிகடியும் மகளிர்கள் “ஆயோ“ என்று கூவும், அம்மழலை இன்னிசையால் - அந்த மழலையுடைய இனிய குரலாலே, போய் ஓங்கு பூஞ்சோலை வாழும் புனக்கிளிகள் - வெருவிப்போய் அப்பூம்பொழிலிலே வாழும் அத்தினைப்புனக்கிளிகளை, மாயோன் மடந்தைமார் - திருமாலாகிய திவிட்ட நம்பியின் தேவிமார்கள், கூவி - தாமும் ஆயோ எனக் கூவி, மகிழ்விப்பார் - அக்கிளிகளை மகிழும்படி செய்வர், (எ - று.) கிள்ளைகள் ஈண்டும் தினைப்புனம் உண்டு போலும் என்று மகிழ்ந்தன என்க. தேவியர் ஆயோ எனக் கூவிப் புனக்கிளிகளை மகிழ்விப்பர் என்க. | (527) | | |
|
|