(இ - ள்.) வலம்புரி வாய் வைத்தான் - வலம்புரியாகிய பாஞ்ச சந்நியத்தைத் திருவாய்மலரிலே வைத்து முழக்கினான், வார்சிலை கைக்கொண்டான் - நெடிய சார்ங்கமென்னும் வில்லைக் கையிலே பற்றினான், அவ்வளவானே, சலம்புரி சண்டை - பகைவருடைய வஞ்சகமிக்க போர்த் தொழிலிலே, தலை பனிப்புக் கண்டான் - அவர் தம் தலைகள் அச்சத்தாலே நடுங்கியதனைப் பார்த்தான், பொலம்புரி தாமரையான் - பொற்றாமரை மலரிலே வீற்றிருப்பவளாகிய திருமகளின், பொன் ஆகம் தோய்ந்தான் - அழகியதிருமேனியைத் தழீஇயினான், (அவன் யார் எனில்) கலம்புரி வள்தடக்கை - அருங்கலங்களையுடைய வள்ளன்மைமிக்க பெரிய கையினையுடைய, கார்மேக வண்ணனே - கரிய முகில் நிறமுடையோனாகிய நம் தலைவன் திவிட்ட நம்பியே ஆவன், (எ - று.)வலம்புரி முழக்கினான்; சிலைகைக் கொண்டான், அத்துணையானே சண்டை தலைபனிப்புக் கண்டான், பொன்னகந் தோய்ந்தான்; அவன் யாரெனில், கார்மேகவண்ணன் என்றாள் என்க. |