சுயம்பிரபை அஞ்சுதலும்
நம்பி தோன்றித் தழீஇக் கோடலும்

1666. நாண்டனா னிறைந்த நங்கை
     நடுங்குபு நுடங்கி நோக்கி
யாண்டையா ரடிக ளென்னு
     மாயிடை யஞ்சல் பொன்னே
ஈண்டையே னென்னை பட்ட
     தென்றுசென் றணுகி 1னானால்
வேண்டிய விளைத்துக் கொள்ளும்
     விழுத்தவம் விளைத்து வந்தான்.
     (இ - ள்.) நாண்தனால் நிறைந்த நங்கை - நாண் என்னும் பெண்மைக் குணம்
நிறைந்த சுயம்பிரபை, நடுங்குபு நுடங்கி நோக்கி - அஞ்சி நடுங்கி ஒல்கி நாற்றிசையினும்
பார்த்து, அடிகள் யாண்டையார் என்னும் ஆயிடை - நம்மடிகளார் எவ்விடத்துள்ளார்
என்று கூறும் அப்பொழுதே, அஞ்சல் பொன்னே - அஞ்சேல் திருமகளே,

     ஈண்டையேன் - யான் இவ்விடத்தே தான் உளேன், பட்டது என்னை என்று -
இங்கே என்ன நிகழ்ந்தது என்று வினவியவனாய், சென்று அணுகினான் - அத்தேவிபாற்
சென்றெய்தினான், (அவன் யார் எனில்) வேண்டிய விளைத்துக் கொள்ளும் - தாம்
வேண்டியவற்றை வேண்டியபடி விளைவித்துக் கொள்ளுதற்குக் காரணமான, விழுத்தவம் -
சிறந்த தவத்தினை, விளைத்து வந்தான் - முற்பிறப்பில் ஆற்றி வந்து தோன்றியவனாகிய
திவிட்டன், (எ - று.)

“வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
     மீண்டு முயலப் படும்“

     (திருக். செய். 265)என்னும் குறட்கருத்தை ஈண்டுக் காண்க.

     கோப் பெருந்தேவி நடுங்கி நோக்கி அடிகள் யாண்டையார் என்ன,
நம்பி ஈண்டையேன் என்னை பட்டதென்று அணுகினான் என்க.

     யாண்டையார் - எவ்விடத்தார், ஈண்டையேன் - இவ்விடத்தேன்.

(536)