மகளிர்கள் ஒப்பனை செய்தல்

1688. தேவியர் திருமணி மேனி நீர்துடைத்
தாவியம் புனைதுகி லல்குன் மேலுடீஇக்
காவியங் கண்ணினார் காக துண்டத்தின்
ஆவியா லீர்ங்குழ லாவி யூட்டினார்.
     இதுமுதல், 6 செய்யுள்கள் ஒரு தொடர்.

     (இ - ள்.) தேவியர் - நம்பியின் மனைவிமார்கள், திருமணி மேனிநீர் துடைத்து -
அழகிய மணிநிறமுடைய தம்மேனியின் ஈரத்தைத் துடைத்து, ஆவி அம் துகில் -
பாலாவிபோன்று மெல்லிய அழகுடைய ஆடையை, அல்குல்மேல் உடீஇ - தம் இடையிலே
உடுத்திக்கொண்டு, காவி அம் கண்ணினார் - குவளை மலர்போன்ற அழகிய
கண்ணையுடைய அம்மகளிர்கள், காக துண்டத்தின் ஆவியால் - அகிற்புகையாலே,
ஈர்ங்குழல் - ஈரமுடைய தம் அளகக் கற்றையை, ஆவி ஊட்டினார் - மணமூட்டி
உலர்த்தினர், (எ - று.)

     நம்பியோடே பகற்கோயிலின்கட் சென்ற தேவியர் நீர்துடைத்து, ஆவியந் துகிலுடுத்து
அகிற்புகையாலே ஈர்ங்குழல் ஆவியூட்டினர், என்க.

(558)