(இ - ள்.) வந்தவன் வணங்கலோடும் - அவ்வாறு வந்த விச்சாதரன் வணங்கியவுடனே, மாமனை நுதலி - தன் மாமனாகிய சுவலனசடி மன்னனை நினைவு கூர்ந்தவனாய், என்னை, கந்து அணையானை வேந்தன் கழல்அடி செவ்வியோ என்று - தூதனே! தூணில் கட்டப்படும் அரசுவாவினையுடைய சடிமன்னருடைய வீரக்கழலணிந்த திருவடிகள் வலியவோ? என்று, அந்தமில் ஆழி ஆள்வான் வினவலின் - அழிவற்ற சக்கரப்படையை உடைய நம்பி வினவினனாக, அருளுமாறு என்று - அத்தூதனும், “அடிகள் விரும்பியருளிய படியே“ என்று கூறி, இந்திரன் அனைய நீராற்கு - தேவர்கோமானை ஒத்த மாண்புடைய திவிட்டநம்பியை, இறைஞ்சலும் - வணங்கியவுடன், இருக்க என்றான் - தூதனே அமர்க என்று உபசரித்தான், (எ - று.)என்னை - என்றது, ஒருவரோடு சொல்லாட்டம் தொடங்குவார் அவரை முன்னிலையாக்கும் பொருட்டு முன்னர்த் தொடங்கும் ஒரு சொல். என் + ஐ - என் தலைவனாகிய எனினுமாம். வந்து வணங்கிய விச்சாதரனை நோக்கி, மாமனாகிய சடியரசனின் நலத்தை வினாவ, அவனும் அடிகள் விரும்பியவாறே என்று வணங்க, அமர்க என்று நம்பி கூறினான், என்க. |