புகழ்பாடிப் பூவிறைத்தல்

171. கொடியாடு நெடுநகரக் கோமான்றன் குணம்பரவி
1அடிபாடு மவர்களென வணிவண்டு முரன்றனவே
வடிவாய வேலவற்கு மலர்ச்சின்னஞ் சொரிவனபோல்
2கொடுவாய கிளிகோதிக் 3குளிர்நறும்போ துகுத்தனவே.
 

     (இ - ள்.) அணிவண்டு - அழகிய வண்டுகள்; கொடி ஆடும் நெடுநகரக்
கோமான்தன் குணம் பரவி அடிபாடும் அவர்கள் என - கொடிகள் அசையப்பெற்ற பெரிய
இரதநூபுர நகரத்தின் அரசனான சுவலனசடியினது குணங்களைப் போற்றி அவனுடைய
அடிகளைப் பாடுபவர்களைப்போல; முரன்றன - ஒலித்தன; கொடுவாய கிளி -
வளைந்தவாயையுடைய கிளிகள்; வடிவாய வேலவற்கு மலர்ச் சின்னஞ் சொரிவனபோல் -
வடித்த வாயினையுடைய வேற்படையையுடைய அரசனுக்கு விடுபூக்களைச் சொரிபவைபோல;
குளிர் நறும் போது கோதி உகுத்தன - தண்ணிய நறுமணமுள்ளமலர்களைக் கொத்திச்
சிந்தின. (எ - று.)

     அவ்வரசன் வருகின்ற சமயத்தில் அப்பொழிலில் வண்டுகள் ரீங்காரஞ் செய்தலை,
அவ்வரசன் குணங்களைப் புகழ்ந்து பாடுவதாகவும், கிளிகள் மலர்களை வாயலகாற்கோதி
உதிர்த்தலை அவ்வரசன் மீது விடுபூச் சிந்துவதாகவும் கற்பித்தார். விடுபூ - மாலையாகத்
தொடுக்கப்படாத தனிப்பூ. கொடிவாய என்னும் பாடத்திற்குச் சிறிய வாயினையுடைய என்று
பொருள் கொள்க. கொடி - சிறுமை.

( 53 )