விச்சாதரர் உலகினின்றும் ஒரு விமானம் வருதல் | 1723. | விஞ்சைய ருலகிற்கும் விடுத்து மோகையென் றஞ்சன வண்ணனங் கருளு மாயிடை மஞ்சுடை விசும்பினின் றிழிந்து வந்தது செஞ்சுட ருமிழ்வதோர் செம்பொன் மானமே. | (இ - ள்.) விஞ்சையர் உலகிற்கும் விடுத்தும் ஓகை என்று - விச்சாதரர் உலகினராகிய சடிமன்னன் முதலியோருக்கும் இவ்வுவகைச் செய்தியைத் தூதுவராலே அறிவிப்பாம் என்று, அஞ்சனவண்ணன் - திவிட்டநம்பி, அங்கு அருளும் ஆயிடை - அவ்விடத்தே நினைத்தருளிய பொழுதே, மஞ்சுடை விசும்பினின்று - முகில்களையுடைய வானத்தினின்றும், செஞ்சுடர் உமிழ்வது ஓர் செம்பொன் மானம் - செவ்விய ஒளியைப் பரப்புவதாகிய ஒரு செவ்விய பொன்னாலியன்ற விமானம், இழிந்து வந்தது - இறங்கி நகரத்தை எய்தியது, (எ - று.) ஓகை உவகை என்பதன் மருஉ, ஓகைக்குக் காணரமான செய்தியை ஓகை யென்றார். சடி முதலியவர்க்கு இச்செய்தியை அறிவிப்பேம் என்று நம்பி கருதுமளவிலே, விசும்பினின்றும் ஒரு விமானம் இறங்கி எய்தியது என்க. | (593) | | |
|
|