சோதிமாலை கருவுயிர்த்தல் | 1732. | மாணிக்க மரும்பிய வண்பொன் மாநிலத் தாணிப்பொன் னனையவ ளனைய ளாயபின் கோணிற்கும் விசும்பிடைக் குழவித் திங்களும் நாணிப்போ முருவொடு நம்பி தோன்றினான். | (இ - ள்.) மாணிக்கம் அரும்பிய - மாணிக்கம் என்னும் மணிகள் ஒளிவிடுகின்ற, வண்பொன் மாநிலத்து - வளவிய பொன்மயமான மலை நிலத்திலே, ஆணிப்பொன் அனையவள் - மாற்றுயர்ந்த பொன்னை நிகர்த்த சோதிமாலை, அனையள் ஆயபின் - அவ்வாறாயின பின்னர், கோள்நிற்கும் விசும்பிடை - கோள்கள் உளவாகிய வானிடத்தே, குழவித் திங்களும் - இளந் திங்களும், நாணிப்போம் உருவொடு - நாணுதற்குரிய பேரொளியோடே, நம்பி தோன்றினான் - திருமகன் பிறந்தனன், (எ - று.) ஆணிப் பொன் - உறையிடப்பட்ட பொன், ஆணி - கட்டளை. குழவித் திங்கள் என்றது - குழவிஞாயிறு என்றாற் போன்று கீழ்த் திசையிலே தோன்றும் முழுத்திங்களை என்க; பிறையை யன்று. சோதிமாலைக்குத் திங்களும் நாணும் எழிலுடன் நம்பி தோன்றினான் என்க. | (602) | | |
|
|