1766. இற்றை நாள்தொட்டுப் பத்துநாட்கள்
     சுயம்வர விழா நாட்கள் எனல்
இன்றைநா ளுள்ளுறுத் தீரைஞ் ஞாள்களும்
     மன்றலஞ் 1சுயவரம் வரைந்த தாதலால்
ஒன்றிவா ழரசரோ டுலக மீண்டுக
     வென்றுதா னிடிமுர சறைந்த தென்பவே.
     (இ - ள்.) இன்றை நாள் உள்ளுறுத்து ஈர்ஐஞ் ஞாள்களும் - இந்த நாள் தொடங்கி
மேனிகழும் பத்து நாட்களும், மன்றலம் சுயம்வரம் வரைந்தது ஆதலால் - திருமணத்திற்குக்
காதரணமான சுயம்வரத்திற்கு என்று குறிக்கப்பட்டுள்ளமையால், ஒன்றி வாழ் அரசரொடு
உலகம் ஈண்டுக - கேண்மை கொண்டு வாழ்கின்ற மன்னர்களுடனே இவ்வுலகில்
வாழ்வோரெல்லாம் வருக, என்று தான் இடி முரசு அறைந்தது என்பவே - என்றிவ்வாறு
கூறி இடிக்கும் முரசு முழக்கப்பட்டது என்று மேலோர் கூறுவர், (எ - று.)

     ஞாள்கள் - நாள்கள் : நகரத்திற்கு ஞகரம் போலி.

     இன்று தொடங்கிப் பத்து நாட்கள் சுயம்வரத்திற்கென வரையறை
செய்யப்பட்டமையால் அரசர்களுடனே மக்கள் எல்லாம் அவ்விழாவிற்கு வருக என்று
முரசறைந்தனர் என்க.

(636)