அயோத்தி அரசன் வருகை

வேறு

1784. எரிமணி வயிரப் பூணா
     னிக்குவா குலத்துட் டோன்றி
அருமணிப் புரிசை வேலி
     யயோத்தியாள் கின்ற வேந்தன்
திருமணி நிழற்றுஞ் செம்பொன்
     னெடுமுடி திருவில் வீசப்
புரிமணி யாரந் தாழப்
     பொன்னகர் பொலியப் புக்கான்.
     (இ - ள்.) எரிமணி வயிரப் பூணான் - சுடருகின்ற வயிர மணி அணிகலனைப்
பூண்டவனும், இக்குவா குலத்துட்டோன்றி - பெருமைமிக்க இக்குவாகுவின் நல்ல குலத்திலே
பிறந்து, அருமணிப் புரிசை வேலி அயோத்தி ஆள்கின்ற வேந்தன் - பெறற் கரும்
மணிகள் பதித்த மதிலை வேலியாகவுடைய அயோத்தி நகரத்தை ஆளுகின்றவனுமாகிய
மன்னன், திருமணி நிழற்றும் செம்பொன் நெடு முடி திருவில் வீச - சிறந்த மணிகள்
சுடருகின்ற செவ்விய பொன்னாலாகிய தனது நீண்ட முடிக்கலன் அழகிய ஒளியைப்
பரப்பவும், புரிமணி ஆரந்தாழ - விருப்பத்தைத் தூண்டுதலை யுடைய முத்துமாலை
தூங்கவும், பொன்னகர் - அழகிய அம்மண்டபம், பொலியப் புக்கான் - பொலிவுறும்படி
வந்து புகுந்தான், (எ - று.)

     அம் மண்டபத்தே அயோத்தி வேந்தன் நெடுமுடி திருவில் வீச ஆரந்தாழ அது
பொலியப் புக்கான் என்க.

     இக்குவாகு குலம் ஐம்பெருங்குலங்களுள் ஒன்று.

(654)