(இ - ள்.) சொரிமது கலந்த சோலை - பொழிகின்ற தேன் விரவிய பொழில்களையுடைய. சூரியபுரமது ஆளும் - சூரியபுரத்தை ஆளும் மரபினராகிய, அரிகுலத்து அரசர் கோமான் - அரி குலத்துட்டோன்றிய மன்னர்மன்னன், அவிர்மணி யாரம் தாங்கி - விளங்குகின்ற மணிவட மணிந்தவனாய், பொருமலைப் பகடு நுந்தி - போர்த்தொழில் புரியும் மலையை ஒத்த களிற்றி யானையை ஊர்ந்து, புயல் அலைத்து இருண்டு வீழ்ந்த புரிமலர் குஞ்சி தாழ - முகிலைத் தோற்கச் செய்வதாய் இருண்டு சரிந்த மலர் சூட்டப்பெற்ற தலைமயிர் தாழ்ந்து கிடப்ப, பொன்நகர் புகழப் புக்கான் - அழகிய நகரம் புகழும்படி சயமர மண்டபத்தே புகுந்தான் ; (எ - று.)அரிகுலத்தே தோன்றிச் சூரியபுரத்தை ஆள்கின்ற அரசன் ஆரந்தாங்கிப் பகடுந்திக் குஞ்சி தாழப் புகழப் புக்கான் என்க. அரிகுலம் ஐம்பெருங் குலத்துள் ஒன்று. |