அரிமரபரையன் சிறப்பு

1812. சொரிமலர்த்தண் மலரணிந்த சோலைசூழ்
     சூரியத்தார் கோமான் றோலா
அரிகுலத்தார் போரேறிவ் வரியேறு
     போலிருந்த 1வரச காளை
வரிமலர்த்து மணிவண்டு புடைவருடு
     மாலையார் மகளிர் வாட்கண்
புரிமலர்த்தண் வரையகலம் புணராதார்
     புண்ணியங்கள் புணரா தாரே.
     (இ - ள்.) சொரிமலர் தண் மலர் அணிந்த சோலைசூழ் - உதிர்தலையுடைய மலர்ந்த
குளிர்ச்சி பொருந்திய மலரால் அழகுற்ற சோலைகளாற் சூழப்பட்ட, சூரியத்தார் கோமான் -
சூரியபுரத்து மன்னனும், தோலா - தோற்றறியாத, அரிகுலத்தார் போர் ஏறு -
அரிமரபிற்றோன்றிய போர்வல்ல சிங்கம், இவ்வரியேறு - இந்த ஆண்சிங்கம் போலிருந்த,
அரச காளை - மன்னனுடைய, புரிமலர்த்தண் வரையகலம் - விரும்புதற்குக் காரணமான
மலர் பொருந்திய குளிர்ந்த மலைபோன்ற மார்பிடத்தே, புணராதார் -
புணரப்பெறாதவராகிய, மலர்த்தும் வரிமணி வண்டு - மலர்களை நெகிழ்த்து மலரச்செய்யும்
வரியுடைய மணி போன்ற வண்டுகள், புடைவருடும் மாலையார் வாட்கண் மகளிர் பக்கத்தே
கிண்டுதலையுடைய மலர்மாலையணிந்தவராகிய வாள்போலும் கண்களையுடைய மகளிர்கள்,
புண்ணியங்கள் புணராதார் - அறஞ்செய்து அதன் பயன் கைவரப் பெறாதவரேயாவர்,
(எ - று.)

     இவன் சூரியத்தார் கோமான், தோலா அரிகுலத்தார் போரேறு, அரச காளை, இவ்
வரியேறு போலிருந்தான் வரையகலம் புணராதார் புண்ணியங்கள் புணராதார் என்றாள்
என்க.

(682)