1856. அக் கூற்றத்தை வெல்ல
     உபாயங் கூறுக என்னல்
சந்தினாற் றவிர்க்க லாமோ
     சார்பினா லொழிக்க லாமோ
பந்தியா முன்னந் தாமே
     பகைத்திருந் துய்ய லாமோ
வெந்திறற் காலன் றன்னை
     மேற்சென்று வெல்ல லாமோ
உய்ந்துயிர் யாங்கள் வாழு
     முபாயநீ ருரைமி னென்றான்.
     (இ - ள்.) சந்தினால் தவிர்க்கலாமோ - அக்கூற்றவாசனைச் சந்து செய்தலாலே
உயிர்கொள்ளாதபடி ஒழித்தல் கூடுமோ, சார்பினால் ஒழிக்கலாமோ - அன்றி அவன்பால்
அடைக்கலம் புகும் ஆற்றாலே ஒழித்தல் கூடுமோ, பந்தியா முன்னம்தாமே - அவன்
நம்மைக் கட்டுதற்கு முன்னரே, பகைத்து இருந்து - அவனைப் பகைத்தே அவன் நம்மேல்
வாராதபடி அரண்செய்து கொண்டு இருந்து, உய்யலாமோ - அவன்பாற் றப்பி உய்தல்
கூடுமோ அன்றி, வெந்திறல் காலன் தன்னை - வெவ்விய ஆற்றலுடைய அம்மறலியை,
மேற்சென்று - போர்மேற் சென்று போர்செய்து, வெல்லலாமோ - வென்றொழித்தல்
கூடுமோ, யாங்கள் - யாம், உய்ந்து - அம்மறலிக்குத் தப்பி, உயிர் வாழும் உபாயம் -
உயிர்வாழ்வதற்குரிய உபாயத்தை ஆராய்ந்து, உரைமின் என்றான் - கூறுங்கோள் என்று
இயம்பினான், (எ - று.)

     சாம, பேத, தான, தண்டம் என்னும் உபாயங்களாலே அம் மறலிக்குத் தப்பி உயிர் வாழ்தல் கூடுமோ உரைமின் என்றான் என்க.

(726)