1859. அருங்களி யானை வேந்தே
     யத்துணைப் பாணி யுண்டோ
கருங்களி மதநல் யானை
     வாய்புகு கவள மேபோல்
பெருங்களி யாளன் காலன்
     பிறையெயி றணிந்து நின்ற
இருங்களி யாணர் வாழ்விற்
     கிமைப்பிடை பெரிது கண்டாய்.
     (இ - ள்.) அருங்களி யானை வேந்தே - அணுகுதற்கரிய மதக் களிப்பையுடைய
யானையை உடைய அரசே, அத்துணைப் பாணியுண்டோ - அவ்வளவு கால
விடையீடுதானும் உளதேயோ, கருங்களி மதநல் யானை - கரிய களிப்பையுடைய மதநீர்
பொழியும் நல்ல யானையினுடைய, வாய்புகு கவளமேபோல் - வாயிடத்தே புகுதலையுடைய
கவளத்தைப் போன்று, பெருங் களியாளன் காலன் - மிக்க களிப்பையுடைய மறலியின்,
பிறை யெயிறு அணிந்து நின்ற - பிறைபோல வளைந்த கோரப்பற்களை அணுகி நிற்கின்ற,
இருங்களியாணர் வாழ்விற்கு - மிக்க மகிழ்ச்சிக்குக் காரணமான புது வருவாயையுடைய
மனிதருடைய வாழ்க்கை அழிந்து ஒழிதற்கு, இமைப்பிடைப் பெரிது கண்டாய் -
கண்ணிமைப் போதாகிய ஒரு மாத்திரையும் மிகையாகும் காண், (எ - று.)

     கவளம் - யானை உணவு. அணிந்து - அண்மி.

     மான் குட்டியின் வாழ்வுகூட நீளிதாம்; மனிதர் வாழ்வு அழிதற்கு ஒரு கண்ணிமைப்
பொழுதும் மிகை என்றார் என்க. இருங்களியாணர் வாழ்க்கை என்றது இகழ்ச்சிக் குறிப்பு.

(729)