அத்துறவியரடியின்றிப் புகல் பிறிதில்லை எனல் | 1862. | குருகயா வுயிர்க்குஞ் சோலைக் குளிரணிப் பழன நாட முருகயா வுயிர்க்கும் பூவார் முறிமிடை படலை மாலைத் திருவயா வுயிர்க்கு மார்பற் செறிதவர் சரண மூலத் தருகயா வுயிர்ப்பி னல்லா லரண்பிறி தாவ துண்டோ. | (இ - ள்.) குருகு அயா உயிர்க்கும் குளிர்சோலை அணி பழன நாட - அன்னங்கள் இளைப்பாறுகின்ற குளிர்ந்த சோலைகளாலே அழகுடைத்தாய வயல்களையுடைய நாட்டின் அரசனே, முருகு அயா வுயிர்க்கும் பூ ஆர் முறிமிடை படலை மாலை - தேன் துளிக்கும் மலருடனே பொருந்திய தளிர்களும் செறித்துள்ள பல் பூங்கண்ணிப் படலை என்னும் மாலையணிந்த, திரு அயா உயிர்க்கும் மார்பன் - திருமகள் வருத்தந்தீர்ந்து வதிகின்ற மார்பையுடைய அருகபரமனை, செறிதவர் சரண மூலத்து - நெருங்குதற்குக் காரணமான தவத்தையுடைய துறவியரின் திருவடியின் கண்ணே - பொருந்தி, அருகு - அவற்றின் பக்கத்தே, அயா வுயிர்ப்பினல்லால் - இறப்பச்சம் தீர்ந்து அமைதி யடைவதன்றி, அரண் பிறிது ஆவதுண்டோ - புகலாவதொன்று பிறிதில்லை, (எ - று.) படலைமாலைத் திரு அயாவுயிர்க்கும் மார்பன் என்றது அருகபரமனை. துறவியர் திருவடிகளிற் றஞ்சம் புகுந்து இறப்பச்சம் அகற்றி அமைதி யுறுதலன்றிப் புகல் வேறில்லை என்றார் என்க. | (732) | | |
|
|