1866. அருள்புரி யழலஞ் சோதி
     யாழியா னாதி யில்லான்
மருள்புரி வினைகட் கென்று
     மறுதலை யாய வாமன்
இருள்புரி யுலகஞ் சேரா
     வியனெறி பயந்த பெம்மான்
பொருள்புரி விழவு காண்பார்
     புண்ணிய வுலகங் காண்பார்.
      (இ - ள்.) அருள்புரி - உயிர்களிடத்தே அருள் பொழிகின்ற, அழல் அம் சோதி
ஆழியான் - தீப் பிழம்புபோன்ற அழகிய ஒளியையுடைய அறவாழி அந்தணன்,
ஆதியில்லான் - தனக்கொரு முதலில்லாதவன், மருள்புரி வினைகட்கு என்றும் மறுதலையாய
வாமன் - மயக்கத்தைச் செய்கின்ற ஞானாவரணீயம் முதலிய வினைகட்கு எப்போதும்
முரண் ஆயவனாகிய வாமன் என்னும் திருப்பெயரையுடையோன், இருள்புரி உலகம் சேரா
இயல்நெறி பயந்த பெம்மான் - இருள்சேர் இன்னாத் தருகின்ற வுலகத்தே பிறவாதபடி
செல்லுதற்குரிய நன்னெறியைக் கூட்டும் மேலான மெய்ந்நூலினை உரைத்தருளிய பெருமான்
என்று கூறப்படுகின்ற அருகக்கடவுளின், பொருள் புரி விழவு - மெய்ப்பொருள்
உணர்ச்சிதரும் விழாவினை, காண்பார் - விழைவுடனே காண்பவர்கள், புண்ணிய உலகம்
காண்பார் - புண்ணிய உலகங்களிலே சென்று பிறப்பார்கள், (எ - று.)

     ஆழியான் ஆதியில்லான் வினைகட்கு மறுதலையாய வாமன் இயல்நெறி பயந்த
பெம்மான் பொருள்புரி விழவினை விரும்பிக் காண்போர் கற்ப உலகங்களிலே பிறந்து
இன்புறுவர் என்க.

 (736)