பயாபதி வேந்தன் யானைமேல் வருதல்

1879. நகரமாங் கெழுந்தபி னரலுஞ் சங்கொடு
முகுரவாய் மணிமுர சதிரு மூரிநீர்
மகரமால் கருங்கடன் மருளுந் தானையான்
சிகரமால் யானைமேற் செல்வன் றோன்றினான்.
     (இ - ள்.) நகரம் ஆங்கு எழுந்தபின் - நகரத்தில் வாழும் மக்கள் அவ்வாறு
எழுந்தவுடனே, நரலும் சங்கொடு - முழங்குகின்ற சங்குகளுடனே, முகுரவாய் - கண்ணாடி
போன்ற வாயை யுடைய, மணிமுரசு அதிரும் - அழகிய முரசங்கள் முழங்கும், மூரிநீர் -
பெருகிய நீரையுடைய, மகரமால் கருங்கடல் - மகரமீன்கள் உலவுகின்ற பெரிய கருமையான
கடலைப்போலும், தானையான் - படையையுடைய பயாபதி வேந்தனாகிய, செல்வன் -
செல்வமிக்கோன், சிகரமால் யானை மேல் தோன்றினான் - மத்தக முடியையுடைய பெரிய
யானை மேலே வந்தான், (எ - று.)

     முரச முழக்கும்தானை, கடல்போலும் தானை, என்று கூட்டுக.

     நகரமக்கள் அவ்வாறு எழுந்தவுடன் தானையான், செல்வன் யானை மேற் றோன்றினான் என்க.

(779)