(இ - ள்.) வான்வணங்க - விண்ணவர்கள் போற்ற; மணம்மயங்கு தாமரைமேல் சென்றாய் - மணம் நிறைந்த தாமரை மலரின்மேல் நடந்து சென்றருளினாய்; குணம்மயங்கி யாம்பரவ - உன்னுடைய குணங்களால் நாங்கள் அன்பிலமிழ்ந்து போற்றுதலைச் செய்ய; கொண்டு உவப்பாய் அல்லை - அதனை ஏற்றுக்கொண்டு நீ மகிழ்வோயல்லை; கொண்டு உவப்பாய் அல்லை எனினும் - அவ்வாறு ஏற்றுக்கொண்டு நீ மகிழ்வோயல்லை என்றாலும்; உலகம் கண்டு குளிர்ந்து உவப்ப நின்றாய்கண் - உலகத்துயிர்கள் கண்டு பிறவித்துன்பம் ஒழிந்து மகிழுமாறு நின்ற நின்னிடத்தில்; காதல் ஒழியோம் - நாங்கள் அன்பு நீங்கமாட்டோம், (எ - று.) வான் என்பது வானத்திலுள்ள தேவர்களைக் காட்டுதலின் இடவாகு பெயர். சைனசமயத்திலே கூறப்பெறும் இறைவனுடைய குணங்கள், அநந்தசுகம், அநந்த ஞானம், அநந்தவீரியம், அநந்ததரிசனம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை, அழியாவியல்பு என எட்டாம். |