வேறு
முனிவர்களின் போற்றுதலைக்கேட்ட உயிர்கள்

தீவினை தீர்தல்

190. தீதறு முனிவர்தஞ் செல்வன் சேவடிக்
காதலி னெழுவிய காம ரின்னிசை
யேதமின் றெவ்வள விசைத்த தவ்வள
வோதிய வுயிர்க்கெலா முறுகண் டீர்ந்தவே.
 

     (இ - ள்.) தீது அறு முனிவர் - குற்றமற்ற சைன முனிவர்கள், தம் செல்வன் சேவடி
- தங்கள் கடவுளான அருகனது சிவந்த திருவடி களினிடத்தில்; எழுவிய - இவ்வாறு குரல்
விட்டுப்பாடிய; ஏதம் இன்று - குற்றமில்லாததான; காமர் இன்னிசை - அழகிய இனிய
பாடல்களின் ஒலி; எவ்வளவு இசைத்தது - எவ்வளவு தொலைவரையிற் கேட்டதோ;
அவ்வளவு - அவ்வளவு தொலைவரையிலுமுள்ள; ஓதிய உயிர்க்கு எலாம் - சிறப்பித்துச்
சொல்லப்படுகின்ற உயிர்களுக்கெல்லாம்; உறுகண் தீர்ந்த - தீவினைத் துன்பங்கள் நீங்கின,
(எ - று.)

     சாரணர்கள் கடவுளைப் புகழ்ந்து பாடிய இசையைக் கேட்ட உயிர்கள் யாவும் தீவினை
நீங்கி இன்பத்தையடைந்தன. கடவுளைப் புகழ்தலை யல்லாமல், அதனைக் கேட்டல்தானும்
உயிர்கட்கு இன்பத்தைச் செய்யு மென்பது இதனால் பெறப்பட்டது. செல்வன் - செல்வங்கள்
எல்லாவற்றையும் உடைய கடவுள். எழுவிய - எழுப்பிய; குரல் எடுத்துப் பாடிய, எழுவு
பகுதி, உறுகண் - வருந்துங்கண்; இக்காரியப்பெயர் கண்கலங்குதற்குக் காரணமான
துன்பத்திற்கு வழங்கும். அலக்கண், இடுக்கண், பழங்கண், புன்கண் என்பனவுங் காண்க.

( 72 )