பயாபதி மன்னன் அருகபரமேட்டியைத்
துதித்துப் பாடுதல்

வேறு

1903. மூவடிவி னாலிரண்டு சூழ் 2சுடரு நாண
     முழுதுலக 3முடியெழின் முளைவயிர 4நாற்றித்
தூவடிவி னாலிலங்கு வெண்குடையி னீழற்
     5சுடரோயுன் னடிபோற்றிச் சொல்லுவதொன்றுண்டால்
சேவடிக டாமரையின் சேயிதழ்க டீண்டச்
     சிவந்தனவோ சேவடியின் செங்கதிர்கள் பாயப்
பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து
     புலங்கொளா வாலெமக்கெம் புண்ணியர்தங் கோவே.
      இது முதல் 10 செய்யுள் ஒரு தொடர்

     (இ - ள்.) மூவடிவினால் - மூன்று வடிவினையுடையதாகி, இரண்டு சூழ் சுடரும் நாண
- உலகத்தைச் சுற்றி வருகின்ற ஞாயிறும் திங்களுமாகிய இரண்டு ஒளி மண்டிலங்களும்
நாணும்படி, முழுதுலகம் மூடி - உலகங்கள் அனைத்தையும் கவிழ்த்து, எழில் முளை வயிரம்
நாற்றி - அழகைத் தோற்றுவிக்கின்ற வயிரமணி மாலைகள் தூங்கா நிற்ப, தூவடிவினால்
இலங்கு - தூய உருவத்தோடே திகழ்கின்ற, வெண்குடையின் நீழல் - வெள்ளை
வண்ணக்குடை நிழலின்கண் வீற்றிருந்த சுடரோய் - ஒளிப்பிழம்பான அருக பரமேட்டியே!,
உன் அடி போற்றி - உன்னுடைய திருவடிகளை வணங்கி, சொல்லுவது ஒன்றுண்டால் -
அடியோம் கூறக்கிடந்த விண்ணப்பம் ஒன்றுளது அஃதியாதோவெனில், சேவடிகள் -
உன்னுடைய சிவந்த அடியிணைகள், தாமரையின் சேயிதழ்கள் தீண்டச் சிவந்தனவோ - நீ
நடந்த தாமரை மலரின் செந்நிற இதழ்கள் பொருந்தியதாலே சிவப்பு நிறம் எய்தினவோ,
அன்றி, சேவடியின் செங்கதிர்கள் பாய - உன்னுடைய சிவந்த திருவடியின் செந்நிற ஒளி
அம்மலரிடத்தே பாய்ந்தமையாலே, பூ வடிவு கொண்டனவோ - அத்தாமரை மலர்
செந்நிறமான உருவத்தை எய்தினவோ, பொங்கு ஒளிகள் சூழ்ந்து - மிக்க ஒளிக்கற்றைகள்
சூழப்பெற்று, எமக்குப் புலங்கொளாவால் - எம் போன்றோர்க்கு
அறியவொண்ணாதனவாயிருந்தன, எம் புண்ணியர்தம் கோவே - எம் அறத்தகை
அந்தணர்கட்குத் தலைவனே, அதனை அறிவித்தருள வேண்டும்,    

(793)