| Choolamani |
1905. 1ஒளியாகி யுலகாகி நீவிரிந்தா யென்கோ
     உலகெலா நின்னொளியி னுள்ளடங்கிற் றென்கோ
2அளியார வுலகநீ யாள்கின்றா யென்கோ
     3அமருலகு தானின்ன தடியடைந்த தென்கோ
விளியாத மெய்ப்பொருளை நீவிரித்தா யென்கோ
     நீவிரித்த 4வாறேமெய்ப் பொருள்விரிந்த தென்கோ
தெளியாம லில்லைநின் றிருவடிகண் மெய்ம்மை
     தெளிந்தாலுஞ் 5செவ்வனே தெரிந்துரைக்க லாமே.
 
     (இ - ள்.) நீ ஒளியகி உலகுஆகி விரிந்தாய் என்கோ - நீயே ஒளியாகவும்
உலகங்களாகவும் பரவியுள்ளாய் என்பேனோ, அன்றி, நின்னொளியின் உள் உலகெலாம்
அடங்கிற்று என்கோ - நின்னியல்பான ஒளியினுள்ளே அநாதியாய உலகமுற்றும்
அடங்கியுள்ளது என்பேனா, அளி ஆர - உன் அருள் பொருந்தும்படி, நீ உலகம்
ஆள்கின்றாய் என்கோ - நீயே இவ்வுலகங்களை ஓம்புகின்றனை என்பேனோ அன்றி, அமர்
உலகுதான் நின்னது அடியடைந்தது என்கோ - நின்னைப் பெரிதும் விரும்புகின்ற
இவ்வுலகமே உன்னுடைய திருவடிப் பெருமையை உணர்ந்து அவ்வடிகளில் புகல்புக்கது
என்பேனோ, விளியாத மெய்ப்பொருளை - அழிவில்லாத மெய்ப்பொருளின்றன்மையை, நீ
விரித்தாய் என்கோ - நீ அறிந்து கூறினாய் என்பேனோ அன்றி, நீ விரித்தவாறே - நீ
கூறியவண்ணமாய், மெய்ப்பொருள் விரிந்தது என்கோ -அம்மெய்ப்பொருள் உளவாயிற்று
என்பேனோ, தெளியாமலில்லை - எளியேமாயினும் எம்மால் உன் திருவடிப் பெருமை சிறிது
அறியப்படாமலில்லை, தெளிந்தாலும் செவ்வே மெய்ம்மை தெரிந்து உரைக்கலாமே - சிறிது
அறிந்த துணையானே உன் திருவடிப் பெருமையை நன்கு தெரிந்து கூற எம்மனோரால்
இயல்வதேயோ, (எ - று.)

(795)