வேறு

சமணமுனிவர்கள் அமர்ந்த இடம்

192. தென்றலுஞ் செழுமதுத் திவலை மாரியும்
என்றுநின் றறாததோ ரிளந்தண் பிண்டியும்
நின்றொளி திகழ்வதோர் நிலாக்கல் வட்டமும்
சென்றவ ரமர்ந்துழித் திகழ்ந்து தோன்றுமே.
 

     (இ - ள்.) அவர் சென்று அமர்ந்த உழி - அந்தச் சமண முனிவர்கள் சென்று
அமர்ந்த இடமானது; தென்றலும் - தென்றற் காற்றும்; செழுமதுத் திவலைமாரியும் -
செழுமையான தேன்துளிகளின் மழையும், என்றும் நின்று அறாதது -
எப்பொழுதும்நிலைபெற்று நீங்காததான; ஓர் இளந்தண் பிண்டியும் - இளமைமிக்க குளிர்ந்த ஓர் அசோகமரமும்; நின்று ஒளி திகழ்வது - ஒளிநிலைபெற்று நின்று விளங்குவதாகிய; ஓர்
நிலாக்கல் வட்டமும் - ஒப்பற்ற நிலாவொளி வீசும் படிகக் கல்வட்டமும்; திகழ்ந்து
தோன்றும் - விளங்கித் தோன்றுவதாகும், (எ - று.)

     சமணமுனிவர்கள் கடவுள் வழிபாட்டை முடித்துக்கொண்டு புறப்பட்ட போது
அரசனைக் கண்டு அவனுக்குத் தருமோபதேசஞ் செய்ய எண்ணினர். கோயிலின் முன்னால்
அசோகமரத்தின்கீழ் அமைக்கப்பட்டிருந்த படிகக் கல்வட்டத்தின்மீது சென்று அமர்ந்தனர்
என்க. 'தென்றலும் மதுத்திவலை மாரியும் நின்று அறாதது' என்பது அசோகமரத்திற்கு
அடைமொழி. மதுத்திவலைமாரி - மழை போன்ற தேன்துளிப் பெருக்கு. தருமோபதேசம்
செய்தற்கு வரும் சமணமுனிவர்கள் அமர்தற்பொருட்டு, ஆற்றிடைக்குறை, கோயில்வாயில்,
புண்ணிய தீர்த்தக்கரை பூம்பொழில் முதலிய நல்லிடங்களில் அசோகமரத்தை வளர்த்து
அதன்கீழே பளிங்குக்கல் அமைத்துவைத்தல் சைனர் இயல்பு.

 

  “புலவூண் துறந்து பொய்யா விரதத்து
அவல நீத்தறிந் தடக்கிய கொள்கை
மெய்வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐவகை நின்ற அருகத் தானத்துச்
சந்தி யைந்துந் தம்முடன் கூடி
வந்துகலை மயங்கிய வான்பெரு மன்றத்துப்
பொலம்பூம் பிண்டி நலங்கிளர் கொழுநிழல்
நீரணி விழவினும் நெடுந்தேர் விழவினும்
சாரணர் வரூஉந் தகுதியுண் டாமென
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகொளிச் சிலாதலந் தொழுதுவலங் கொண்டு“

“ஆற்றுவீ யரங்கத்து வீற்றுவே றாகிக்
குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து
வானவர் உறையும் பூநா றொருசிறைப்
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப்
பெரும்பெய ரைய ரொருங்குட னிட்ட
இலங்கொளிச் சிலாதல மேலிருந் தருளிப்
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்
தருமஞ் சாற்றுஞ் சாரணர் தோன்ற“
என்னுஞ் சிலப்பதிகாரமும் ஈண்டு எண்ணத்தக்கது.
 

( 74 )