1945. பெய்யா வருநஞ்சும் பேரழற் குட்டமும்
செய்யாக் குழிகளுஞ் சீநீர்த் தடங்களும்
நையா நரக ரிடமிவை நாறினும்
உய்யா பிறவுயி ரோசனைக் கண்ணே.

     (இ - ள்.) பெய்யா அருநஞ்சும் - பிறராற் பெய்யப்படாது இயல்பின் உளவாகிய
நச்சுப்பொய்கைகளும், பேர் அழல் குட்டமும் - பெரிய தீக்குழிகளும், செய்யாக் குழிகளும் -
இயல்பானுளவாகிய கும்பிக்குழிகளும்,

     சீநீர்த் தடங்களும் - சீழே நீராய் நிறைந்த குளங்களுமாகிய, நையா நரகர் இடம்
இவை - துயரத்தாலே உடலும் உளமும் நையும் நரகர் வதியும் இவ்விடங்களின், நாறினும் -
தீநாற்றம் பட்டாலும், ஓசனைக்கண்ணே - நான்கு காவதத்தொலைவின்கண் உள்ள, பிறவுயிர்
- இந்நரகரல்லாத ஏனைய உயிர்கள், உய்யா - உயிர்த்திரா (இறக்கும் என்றபடி)
நாறினும் என்ற வும்மை, சிறப்பும்மை.

     நஞ்சும் அழற்குட்டமும் சீழ்த்தடங்களும் ஆகிய இந்நரகத்தின் நாற்றத்தை ஒரு
யோசனைத் தொலைவிடத்தே நின்று நுகரினும் ஏனைய உயிர்கள் இறந்துபடும் என்க.
அந்நாற்றத்தின் மிகுதியும் கொடுமையும் கூறியவாறு.

(835)