(இ - ள்.) மாகம் மழை வண்கை மன்னவ - வான்கண்ணதாகிய முகில் போலும் கைம்மாறு கருதாத வள்ளன்மையுடைய பயாபதி வேந்தே, மக்களும் - மனிதர்கள் எல்லோரும், ஏக கதியினர் - பிறப்பானே ஒரே தன்மையுடைய ராயினும், ஏய - இசைந்த, விகற்பினர், - வேற்றுமையுடையோர் ஆவர், சேகர் மிலைச்சர் மனிதர்கள் திப்பியர் போகமனிதர் என - அவ்வேற்றுமை யுடையோர் சேகர் என்றும் மிலைச்சர் என்றும் மனிதர் என்றும் திப்பியர் என்றும் போகமனிதர் என்றும் கூறப்படுகின்ற, பொருட்பட்டார் - சொற்களுக்குப் பொருளாகப் பொருந்திய ஐவகையினருமாம், (எ - று.) “நல்லவர் தீயவர் திப்பியர் ஒப்பில் குமானுயரோ டல்ல வருள்ளுறுத் தாடவர் ஐவருளர்Ó என்றார் நீலகேசியினும் (தருமவுரைச். 82) மனிதருள்ளும் ஐவகைய ருளர் என்க. |