1983. நல்ல நிலங்க ணலங்கொள் வடிவுகள்
இல்லை யமர்ந்துழித் தோன்ற லெனவிவை
எல்லையில் யோனிக ளெல்லா மிகந்தெய்தல்
அல்லியந் தாரோ யரிது பெரிதே.
 
     (இ - ள்.) நல்ல நிலங்கள் - அறநெறி நிற்றற்கியைந்த சிறப்புடைய நாட்டிலே
பிறத்தலும், நலங்கொள் வடிவுகள் - அகம் புறங்களிலே ஊனமில்லாத மனித உடலைப்
பெறலும், இல்லை அமர்ந்துழி - இல்லறத்தை விரும்புமிடத்தே, தோன்றலும் - பிறத்தலும்,
எனஇவை - என்று கூறப்பட்ட இப் பேறுகளை, எல்லையில் யோனிகள் எல்லாம் இகந்து -
அளவிறந்த ஏனைய பிறவிகளைக் கடந்து, எய்தல் - அடைதல், அல்லியந் தாரோய் -
தாமரைமலர் மாலையை உடையோனே, பெரிது அரிது - மிக்க அருமையே யாம், (எ - று.)

    இல்லை அமர்ந்துழி - இல்லிலிருந்து செய்யும் அறத்தை விரும்பும் இயல்புடைய தாய்
தந்தையரிடத்தே என்றபடி.

    உலகில் ஒழுக்கமின்றி விலங்குபோல மனித வகுப்பினர் இருத்தலால் அவ்வகுப்பிற்
பிறவாமல் இல்லற முதலியவற்றை வரைந்து வாழும் வகுப்பிடைப் பிறத்தலும் அரிதென்க.

( 873 )