நெய்தல்

20. கோடு டைந்தன தாழையுங் கோழிருள்
மோடு டைந்தன மூரிக் குவளையும்
தோடு டைந்தன 2சூகமுங் கற்பகக்
காடு டைந்தன போன்றுள கானலே
 
     (இ - ள்.) கோடு உடைந்து அன தாழையும் - சங்கு உடைபட்டாற் போன்று மலர்ந்த
தாழைமலர்களும்; கோழ் இருள் மோடு உடைந்து அன - மிகுந்த இருளின் திரள் உடைந்து
சிதறினாற்போன்று மலர்ந்த; மூரிகுவளையும் - பரிய கரிங்குவளை மலர்களும்; தோடு
உடைந்தன - இதழ் அவிழ்ந்தனவான; சூகமும்-மற்றைய நீர்ப்பூக்களும்; என்னும் இவற்றால்;
கானல்-கடற்கரைச் சோலைகள்; கற்பகம் காடு உடைந்தன போன்றுஉள-விண்ணுலகிலுள்ள
கற்பகச்சோலைகள் மலர்ந்தன போன்று விளங்கலாயின.
(எ - று.)

     “சங்குடைந் தனைய தாழைத் தடமலர்த் தொடைய லாலே“ என்பர். மந்திரசாலைச்
சருக்கத்துள். கோடு-யானைக்கோடுமாம்.

     சூகம்-ஒரு நெய்தனிலப்பூவுமாம்..நெய்தல்நிலத்திலே தாழைமலர் குவளைமலர்
மற்றைய நீர்ப்பூக்கள் ஆகியன மலர்ந்து கடற்கரைச் சோலைகள் கற்பகச்சோலை மலர்ந்தாற்
போன்று விளங்குகின்றன என்றார்.

கோழ் இருள்-கொழுவியஇருள்; மிகுந்த இருள்; கொழுமை என்னும் பண்புப்பெயர்
ஈறுபோய் ஆதி நீண்டு இடையுகரமுங்கெட்டுக் கோழென நின்றது.
 

( 20 )