(இ - ள்.) மன்னா - அரசனே!; காதி அம்கிளைகள்சீறும் - ஞானா வரணீயம், தரிசனாவரணீயம், அந்தராயம், மோகனீயம் என்னுங்காதி கருமக் கூட்டங்களை யொழிக்கின்ற, காமருநெறிக்கும் - அழகிய வீடுபேற்று வழிக்கும், கண்ணாய் - பற்றுக்கோடாய், போதிஅம்கிழவர் தங்கள் தியானத்துப் புலம் கொண்டு ஏத்தி - மெய்யறிவுக்கு உரியவர்களான அடியவர்களால் தங்கள் அறிதுயில் நிலைக்கண் அறிவாற்கண்டு போற்றப்பெற்று, ஆதிஅந்து அகன்றுநின்ற - முதலும் முடிவும் இல்லாமல் விலகிநின்ற, அடிகள் - அருகக்கடவுளது, சரணே - திருவடிகளே, மாதுயர் இடும்பை தீர்க்கும் சரண் எனப் படுவ - மிக்க துன்பத்தைச் செய்யும் பிறவித்துன்பங்களை யொழிக்கின்ற அடைக்கலமென்று சொல்லப்படுவன, கண்டாய் - நீ உணர்ந்து கொள்வாயாக, (எ - று.) அருகக்கடவுளின் திருவடிகளே உயிர்கட்குக் கொடிய பிறவித் துன்பங்களைப்போக்கும்புகலிடமாம் என்க. கடவுட்குப் பிறப்பும் இறப்பும் இல்லையாதலால், 'ஆதியந் தகன்று நின்ற அடிகள்' என்றார். ஞானாவரணீயம் - அறிவை மறைப்பது. தரிசனாவரணீயம் - காட்சியை மறைப்பது. அந்தராயம் - நற்பயன்களை விலக்குவது. மோகனீயம் - மோகத்தைவிளைப்பது. அருகக்கடவுள் வீடுபேற்று வழியை முதன்மறை களைக்கொண்டு விளக்கியதனால் அந்நெறிக்குக் 'கண்ணாய்' எனப்பட்டார். கிழவர் - உரிமை யுணர்த்தும் கிழமையென்னும் பண்பினடியாகப் பிறந்த பெயர். போதி - அறிவு. போதியங்கிழவர் - மெய்யறிவுடைப் பெரியார். |