இரத்தினத் திரயத்தின் பயன் வீடுபேறு என்றல்

202. 1உற்றடு பிணியு மூப்பு மூழுறு துயரு நீக்கிச்
2சுற்றிநின் றுலக மேத்துஞ் சுடரொளி யுருவந் தாக்கிப்
பெற்றதோர் வரம்பி லின்பம் பிறழ்விலா நிலைமை கண்டாய்,
மற்றவை 3நிறைந்த மாந்தர் பெறப்படு நிலைமை மன்னா.
 

     (இ - ள்.) மன்னா - அரசனே!, உற்று அடுபிணியும் - உடலிற்சேர்ந்து மிக
வருத்துகின்ற நோய்களையும், மூப்பும் - முதுமைத் தன்மையையும், ஊழ்உறுதுயரும் -
ஊழ்வினைப் பயனால் நேருகின்ற துன்பங்களையும், நீக்கி - ஒழித்து, சுற்றி நின்று உலகம்
ஏத்தும் - சூழ்ந்து நின்று உயர்ந்தவர்களால் போற்றப் பெறுகின்ற, சுடர்ஒளி உருவம் தாங்கி
- விளங்குகின்ற ஒளிவடிவான உருவத்தை யடைந்து, பெற்றதோர் வரம்பில் இன்பம் பிறழ்வு
இலாநிலைமை - பெறுவதாகிய ஒப்பற்ற எல்லையில்லாத இன்பத்தினின்று என்றும்
மாறுதலில்லாதவீடு பேற்று நிலையை அடைதலே, அவை நிறைந்த மாந்தர் - முற்கூறிய
நன்ஞானம் முதலிய அந்த மூன்றும் நிரம்பப் பெற்ற மனிதரால், பெறப்படும் நிலைமை -
அடையப் பெறுகின்ற நிலையாம், கண்டாய் - அறிவாயாக, (எ - று.)

     கண்டாய் என்பது தேற்றப் பொருள் தந்து நின்றது. மற்று : அசை.

கீழ்க்கூறிய இரத்தினத் திரயத்தினாலாகும்பயன் வீடுபேற்று நிலையென் பதையும்,
அந்நிலையின் இயல்பையும் இச்செய்யுளால் உணர்த்தினார். ஊழாவது - இருவினைப்பயன்
செய்த உயிரையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி. இது விதி எனவும் கூறப்பெறும்.

( 84 )