2021. தேய வினைவவெல்லுந் தெய்வ மனிசருள்
நீயு மொருவனை நின்குலத் தாதிக்கட்
பாய விழுச்சீர்ப் பரதனை யுள்ளுறுத்
தாய திகிரி யவரு மவரே.
 
     (இ - ள்.) தேயவினை வெல்லும் - தேய்ந்திறும்படி இரு வினைகளையும் வெல்லும்
இயல்புடைய, தெய்வமனிசருள் - திப்பியருள்ளே, நீயும் ஒருவனை - பயாபதிமன்னனே
நீயும் ஒருவனாவாய், நின் குலத்து - உன்னுடைய மரபின், ஆதிக்கண் - தொடக்க காலத்தே
தோன்றிய, பாய விழுச்சீர்ப் பரதனை - பரவிய சிறந்த புகழையுடைய பரதனை, உள்ளுறுத்து
- உள்ளிட்ட, ஆய திகிரியவரும் அவரே - தோன்றிய சக்கரவர்த்திகளும் திப்பியர்களே
ஆவர், (எ - று.)

     “பரதன், சகரன், மகவான், சனத்குமாரன், சாந்திநாதன். குந்துநாதன், அரநாதன்,
சுபௌமன், பதுமன், அரிசேனன் செயசேனன், பிரமதத்தன் என்னும் இப்பன்னிரு
சக்கரவர்த்திகளும் தெய்வ மனிதர் என்க.

(911)