(இ - ள்.) அருந்துயர் அறுக்கும் மாண்பின் - கெடுத்தற்கரிய பிறவித் துன்பங்களைக் கெடுக்கும் பெருமையுடைய, ஆர் அமிர்து அவைகள் மூன்றும் - அருமையான அந்த இரத்தினத் திரயத்தை, திருந்த நன்கு உரைப்பக் கேட்டு - கேட்பவர் மனம் நன்றாக ஒழுங்குபடுமாறு சொல்லக்கேட்டு, தீவினை இருள்கள் போழும் - கொடிய கருமங்களாகிய இருள்களை யழிக்கவல்ல, விரிந்தநல் அறிவின்சோதி விளங்கலின் - பரந்த மெய்யறிவுச் சுடர்விளக்கமாகப் பெற்றதனால், சனங்கள் எல்லாம் - அவ்வறி வுரையைக்கேட்ட மக்களனைவரும், அகம்கழுமத்தேறி - உள்ளம் நன்கு தெளிந்து, பரிந்து - மகிழ்ந்து, பவம்பரிந்தவர்கள் ஒத்தார் - பிறப்பு நீங்கப் பெற்றவர்களை யொத்தனர், (எ - று.) அறிவுரையைக் கேட்டோர் வீடுபெற்றாற் போன்ற பேரின்பத்தை யடைந்தார்கள் என்பதாம். இங்கு, சனங்கள் என்றது அரசனுடன் வந்தவர் களை. உறுதி பயத்தலாகிய இன்பத்தை உயிர்க்குச் செய்தலால் இரத்தினத் திரயத்தை அமிர்து என்றார். கழுமல் - மிகுதி, நிறைதல். தேறுதல் - கலக்கம் ஒழிந்துதெளிதல். பரிதல் - மகிழ்தலும், அறுத்தலும். |