முத்தி நெறி

2069. இருவகை வினைகளு மில்ல திவ்வழி
வருவகை யிலாதது மறுவின் மாதவர்
பெருவழி யரச்செலும் பெயர்வில் சூளிகைக்
கொருவழி 1யல்லதிங் குரைப்ப தில்லையே.
 
     (இ - ள்.) இருவகை வினைகளும் இல்லது - நல்வினை தீவினைகள் என்னும்
இருவகைப்பட்ட வினைத்தொடர்பற்றதும், இவ்வழி வருவகை இலாததும் - மீண்டும்
இப்பிறப்பிற் குரிய வழிகளிலே வருதலில்லாததும் ஆகிய, மறுவின் மாதவர் - குற்றமற்ற
சிறந்த தவத்தையுடைய துறவிகள், பெருவழியாச் செலும் - தாம் வெல்லுதற்குரிய சிறந்த
வழியாகக்கொண்டு செல்லும், பெயர்வில் சூளிகைக்கு - மீட்சியற்ற முடியுலகாகிய வீட்டுலகிற்
புகுவதற்கு, ஒருவழி யல்லது - ஒரே வழியுளதாகக் கூறுவதல்லது இங்கு உரைப்பது இல்லை
- இவ்வுலகத்தே சான்றோர்களால் கூறப்படும் வழி வேறு இல்லை, (எ - று.)
மீட்சியில்லாத வீட்டினை அடைதற்கு ஒருவழியே உளது வேறு வழியில்லை அதனைக்
கூறுவேன் கேள் என்றார் என்க.
 

(1)