2070. | பிறந்தவன் பொறிபுலக் கிவரு மப்புலம் சிறந்தபின் விழைவொடு செற்றஞ் செய்திடும் மறைந்தவை வாயிலா வினைக வீட்டினால் இறந்தவன் பின்னுமன் வியற்கை யெய்துமே. | (இ - ள்.) பிறந்தவன் பொறி - இந் நாற்கதிகளுள் வைத்து ஒன்றிற் பிறந்தவனுடைய மெய் முதலிய பொறிகள், புலக்கு இவரும் - ஊறு முதலிய புலன்களை நுகர்தற்கு அவாவிச் செல்லும், அப்புலம் சிறந்தபின் - அப்புலன்கள் அவனுக்கு எய்திச் சிறப்படைந்தவுடன், விழைவொடு செற்றம் செய்திடும் - அவற்றை மேலும் மேலும் ஆக்கிக் கோடற்கண் விருப்பமும், அவற்றை எய்துதற்கு இடையூறு செய்வார் உளராயவழி வெகுளியும் உடையன ஆவான், மறைந்து அவை வாயிலா - அவ் விருப்பமும் வெகுளியுமாயவற்றுள் தன்னை மறைத்து அவையேயாய் அவற்றால், வினைகள் ஈட்டினால் - நல்வினை தீவினைகளை இறப்ப ஈட்டிக்கொண்டால், இறந்தபின் - அப்பிறவியினின்றும் இறந்த பின்னர், அவ்வியற்கைஎய்தும் - அவ்வாறே அவ்வினை காரணமாக ஒரு கதியுட் பிறந்து மேலும் அவ்வினையை ஈட்டும் இயல்பையே எய்துவான், (எ - று.) நாற்கதியினுள் உற்ற உயிர்கள் இறந்தல் பிறத்தலிலே மீண்டும் மீண்டும் சுழன்று வருந்தும் என்றபடி. | (2) | | |
|
|