இதுவுமது

2077. இருட்பிலத் தரும்பட ரெய்திப் பலபுகழ்
வருட்டதை 1யிலனலிந் துண்ண வாழ்பவன்
பொருட்டகு 2வாயில்பெற் றுய்ந்து போம்வழி
உருட்டுவா னொருவனை யுவந்து நாடுமோ.
 
     (இ - ள்.) இருள் பிலத்து - இருள்மிக்க தமப்பிரபை என்னும் தீய நரகத்தில், அரும்
படர் எய்தி - பொறுத்தற்கு அரிய இன்னல் எய்தி, பல் புகழ்வு அருள் ததையிலன் -
பலவாகிய புகழையும் அருளின் செறிவையும் பெறாத மறலி, நலிந்துண்ண - தன்னை
வருத்தித் தின்னா நிற்ப, ஆழ்பவன் - முழுகிக்கிடக்கும் ஒருவன், பொருள் தகு வாயில்
பெற்று - மேலைப் புண்ணியப் பொருளாலே தக்கதொரு வழிகாணப்பெற்று, உய்ந்துபோம்
வழி அந்நரகத்தினின்றும் தப்பிச்செல்லும் போது, உருட்டுவான் ஒருவனை உவந்து நாடுமோ
- மீண்டும் தன்னை அந்நரகத்துள் உருட்டிவிடுகின்ற ஒருவனை விரும்பித் தேடுவானோ,
(எ - று.)

     ஈண்டு அரசனை நரகத்திற் கிடந்துழலும் உயிராகவும், பிறவித் துயரைக்
கூற்றுவனாகவும், துறவியின் அறவுரையை அந்நகரத்தினின்றும் உய்ந்து போதற்குரிய
வழியாகவும், அவ்வாறு உய்ந்துபோகும் போது மீண்டும் நரகத்திலே உருட்டிவிடுவோர்
அமைச்சர் முதலிய கேளிராகவும் கொள்க.
இருட்பிலம் - இருண்ட குகையுமாம்.
 

( 9 )