(இ - ள்.) அரும் சிறைப் பிணி உழந்து - கடத்தற்கரிய சிறைக் கோட்டத்தே பட்டு இன்னல் எய்தி, அலைப்புண்டு - அச்சிறை காவலரால் பெரிதும் துன்புறுத்தப்பட்டு, அஞ்சுவான் - அச்சிறையிடை வதிதலைப் பெரிதும் அஞ்சும் ஒருவன் பெருஞ் சிறைதனைப் பிழைத்து - அப்பெரிய சிறையின் கட் கிடத்தலை யாதானு மோராற்றாற் றப்பி, உய்ந்து போயபின் - பிழைத்து ஓடிய பின்னர், கரும் சிறைக் கயவர் கைப்பட்டு - கொடிய சிறைக்காப்பாளராகிய கயமைத் தொழிலோர் கையில் மீளவும் அகப்பட்டு, வெந்துயர் தரும் - வெவ்விய துன்பத்தையே தருகின்ற, சிறைக்களமது - அச்சிறைக் கோட்டத்தை, சென்று சாருமோ - தானே எய்தித் தாங்குதலை விரும்புவானோ, (எ - று.) ஈண்டுச் சிறை என்றது உடலினை. கருஞ்சிறைக் கயவர் என்றது, அச்சிறையைவிட்டு உயிர் அகன்று போகாதபடி எப்பொழுதும் கட்டி வைக்கும் இயல்புடைய யான் எனது என்னும் இருவகைப் பற்றுக் களையுமாம். |